வவுனியாவில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகத்தின் 45ஆம் நாள் நினைவஞ்சலி!!

839

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், ஊடகப்பேராளுமையுமாகிய பொன்னையா மாணிக்கவாசகத்தின் 45ஆம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு வவுனியா மாநகர மண்டபத்தில் இன்று (27.05) இடம்பெற்றது.

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மூத்த ஊடகவியலாளர் ரத்துகமகே மலர்மாலை அணிவிக்க, வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் பிரதான அஞ்சலிச் சுடரை ஏற்றியதுடன், நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலரஞ்சலி செலுத்தி ஒளித்தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

ஊடக அமையத் தலைவர் ப.கார்த்தீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றது. இதன்போது ‘ஊடகவியலில் மாணிக்கவாசகம்’ எனும் தலைப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்துகமகே சிறப்புரை நிகழ்த்தினார்.

‘கலை பண்பாட்டு வளர்ச்சியில் மாணிக்கம்’ எனும் தலைப்பில் வவுனியா வடக்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபனும், ‘மக்கள் சேவையில் மாணிக்கவாசகம்’ எனும் தலைப்பில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமாரும் ‘வாசகர் பார்வையும் அனுபவ பகிர்வும்’ எனும் தலைப்பில் ஐயம்பிள்ளை யசோதரனும் கருத்துரைகளை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பிரமுகர் வரிசையில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன், சிரேஸ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன், தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவர் க.சிவதர்சன் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.

குறித்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தரப்பினர், சகோதரமொழி ஊடக நண்பர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.