யாழில் இனி பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்களை விற்க முடியாது!!

278

Policeஇலங்கையில் தடைசெய்யபட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை யாழில் விற்பனை செய்யப்படுவதை விரைவில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலையத்தின் சுற்று சூழலுக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி ரொஷான் பீரிஸ் தெரிவித்துள்ளர்.

யாழ். சிவில் பாதுகாப்பு படைத்தலைமை அலுவலகத்தில் நேற்று (03.06) மாலை நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் ஏனைய பாகங்களில் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தடைசெய்யப்பட்ட இவ்வாறான பொருட்களை விற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண வர்த்தகர்கள் 30 வருட கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதனாலையே இதுவரை பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்போது யாழில் பெருமளவான பிளாஸ்ரிக் பொருட்களை தென்னிலைங்கையை சேர்ந்த வர்த்தகர்களே விற்பனை செய்கின்றனர் என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த போது,

பண்டிகை காலம் மற்றும் ஆலய திருவிழாக்களுக்கு வரும் வியாபாரிகளே அவ்வாறான பொருட்களை சந்தைப்படுத்துகின்றனர். அவர்களுக்கு மாநகரசபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளே அனுமதி வழங்குகின்றனர்.

இனிவரும் காலத்தில் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகள் வியாபார நிலையங்களுக்கு அனுமதி வழங்கும் போது இது விடயமாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இனிவரும் காலத்தில் பொலிசாரும் அது தொடர்பில் கவனம் செலுத்துவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.