மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பகுதியில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் வெளிநாடு சென்று வந்து சில தினங்களேயான நிலையில் கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் இருவருக்கும் இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின்போது ஆத்திரமடைந்த கணவன் கத்தியால் மனைவியை குத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து கணவன் தன்னைதானே குத்தி தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார்.
இதன்போது அப்பகுதி அயலவர்கள் ஓடிவந்து இருவரையும் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில் மனைவி அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கணவனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.