வவுனியாவில் முச்சக்கர வண்டியில் மாடு திருடிய இருவர் நள்ளிரவில் மடக்கிப் பிடிப்பு!!

2576


வவுனியாவில் முச்சக்கர வண்டியில் மாடு திருடிய இருவரை பாராளுமன்ற உறுப்பினரும், ஊர் மக்களும் இணைந்து மடக்கிப் பிடித்து பொலிசில் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று (04.06) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.



வவுனியா, சமயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டியை மறித்த மக்கள், குறித்த முச்சக்கர வண்டிக்குள் நான்கு கால்களும் கட்டப்பட்டு தலைகீழாக மாட்டை வைத்து அதனை ரபர் சீற்றால் சுற்றி கடத்திச் செல்வதை அவதானித்துள்ளனர்.





உடனடியாக பொலிசாருக்கும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களும் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரு பகுதியினரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.


மாட்டை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொடுப்பதற்கு கொண்டு சென்றதை அவர் மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொண்டிருந்தார்.


தொடர்ந்து இரவு ஒன்றரை மணிவரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊர்மக்களுடன் இணைந்து மாடு திருடுவதற்கு துணை நின்ற மற்றும் ஒரு நபரை மடக்கிப் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து கொண்டு செல்லப்பட்ட மாடு நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.