வவுனியாவில் அமைந்துள்ள கோவில்குளம் சிவன் முதியோர் இல்லத்தில் ‘RISE’ அமைப்பினால் உளநல மேம்பாட்டு செயற்றிட்டம் நேற்று (04.06) ‘RISE’ அமைப்பின் தலைவர் திரு. க.லக்ஷ்மிகாந்த் தலைமையில் நடைபெற்றது.
பிள்ளைகளால் கைவிடப்பட்டு, யுத்தத்தால் பிள்ளைகளை இழந்து உறவுகளின் ஆதரவும் அரவணைப்பும் இல்லாமல் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு உளநல மேம்பாட்டு செயற்றிட்டம்முன்னெடுக்கப்பட்டது.
சிவன் முதியோர் இல்லத்தில் அவர்களுக்கு தேவையான வசதிகளை நிர்வாகம் செவ்வனே செய்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
இருந்தாலும் உளரீதியாக அவர்கள் பாதிக்கபட்டு இருக்கிறார்கள்.தமது பிள்ளைகள் இருந்தும் தாம் அனாதைகளாக இருப்பதாக அவர்கள் கருதும் நிலை காணப்படுகிறது. இவர்களை உளரீதியாக திருப்திபடுத்தும் நோக்கில் ‘RISE’ அமைப்பால் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிவன் முதியோர் இல்லத்தலைவர் கௌரவ.நவரத்னம் ஐயா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், உளரீதியாக பாதிக்கபட்ட இவர்களுக்கு இது போன்ற செயற்றிட்டங்கள் மிக முக்கியமானதும் எனவும் தொடர்ந்து இச்செயற்றிட்டத்தை முன்னெடுக்குமாறு அவர் கேட்டுகொண்டார்.
தொடர்ந்து அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில், எமது அமைப்பானது மனோ வளர்ச்சி குன்றியோர், அங்கவீனர்கள், வறியோர்கள், அனாதைகள் போன்றோருக்குத் தேவையாக கருதப்படும் சேவைகளையும், அனர்த்தங்களால் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையாக கருதப்படும் சேவைகளை வழங்கும் நோக்கிலேயே அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் எம்மால் கூடிய உதவிகளை, புலம்பெயர் நண்பர்கள் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ முன்வருவோம் என கூறினார்.
இந்நிகழ்வில் சிவன் முதியோர் இல்லத்தலைவர் கௌரவ.நவரத்னம் ஐயா, ‘RISE’அமைப்பின் தலைவர் திரு.க.லக்ஷ்மிகாந்த், உபதலைவர் திரு.செ.பிரியங்கன், இணைச் செயலாளர் திரு.செ.யதார்த்தன் மற்றும் உறுப்பினர்களான பிரகஸ்கர், நிக்சன், பிரணவன், கேசவன், கஜீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.






