கேரளாவில்..
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே புன்னமூடு பகுதியில் ஸ்ரீமகேஷ் (38) – வித்யா தம்பதி வசித்து வந்தனர். இதில் ஸ்ரீமகேஷ் துபாயில் பணி புரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 6 வயதில் நக்ஷத்ரா என்ற ஒரு மகள் இருந்தார்.
இந்த நிலையில், ஸ்ரீமகேஷின் மனைவி வித்யா 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய ஸ்ரீமகேஷ், அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை.
தொடர்ந்து சில மாதங்களில் ஸ்ரீமகேஷின் தந்தையும் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார். இதனால் தாய் சுனந்தா (62), மகள் நக்ஷத்ராவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று அவர்களின் வீட்டில் தந்தை ஸ்ரீமகேஷ் மற்றும் மகள் நக்ஷத்ரா இருந்துள்ளனர். தாய், சுனந்தா அருகில் உள்ள வீட்டுக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்து திடீரென நக்ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டது.
இதனால் பதற்றத்துடன் சுனந்தா மற்றும் உறவினர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். வீட்டு சோபாவில் கழுத்தில் வெட்டு பட்டநிலையில் ரத்த வெள்ளத்தில் நக்ஷத்ரா கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதேநேரத்தில் அங்கு கையில் கோடாரியால் ஸ்ரீமகேஷ் ஆவேசமாக நின்று கொண்டு இருந்தார். திடீரென சுனந்தாவையும் அவர் கோடாரியால் வெட்டினார். இதற்கிடையே அங்கு பொதுமக்கள் திரண்டதால் மகேஷ் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் படுகாயம் அடைந்த நக்ஷத்ராவை மீட்டு சிகிச்சைக்காக மாவேலிக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகேஷின் தாயார் சுனந்தாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி இறந்த நிலையில் 2ஆவது திருமணம் செய்ய ஸ்ரீமகேஷ் பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால் ஸ்ரீமகேசுக்கு இருக்கும் மகளை காரணம்காட்டி பலரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இந்த ஆத்திரததில் கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.