
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச்செல்லப்படுகின்ற சம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று கலந்துரையாடப்பட்டதுடன் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது,
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், குறித்த பகுதியில் அதிகளவாக மாடுகள் கடத்திச்செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
அத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே அவரை இடமாற்றி ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மாடுகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றயதினம் கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளோம்.
அத்துடன் இச் சம்பவங்கள் தொடர்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால். அது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கலாம் என்றார்.




