மயங்கி விழுந்த இளம்பெண் திடீர் மரணம்… நீதிகேட்டு உறவினர்கள் போராட்டம்!!

285

சேலத்தில்..

சேலம், எடப்பாடி அருகே திடீரென உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நீதி விசாரணை கோரியும், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குளம் கிராமம், செம்மண் காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 29), சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கார்த்திக் ராஜாவிற்கும், கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் சுரேகா என்கிற சுந்தரேஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், அண்மையில் அந்த குழந்தை வீட்டில் இருந்து தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. குழந்தை இறந்தது முதல் சுந்தரேஸ்வரிக்கும் அவரது கணவர் கார்த்திக் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த சுந்தரேஸ்வரி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர், அவரை எடப்பாடி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், சுந்தரேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரியின் பெற்றோர்கள் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தங்களது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் புகார் அளித்ததின் பேரில், சுந்தரேஸ்வரியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடைபெறவில்லை எனவும், சுந்தரேஸ்வரியின் உடலை சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி, எடப்பாடி – சேலம் பிரதான சாலையில் சுந்தரேஸ்வரியின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சுந்தரேஸ்வரியின் உறவினர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதுடன், மீண்டும் சுந்தரேஸ்வரியின் உடல் சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் என உறுதி அளித்ததால், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பட்டதாரி பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும் சுந்தரேஸ்வரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில், அவரது இறப்பு குறித்து சங்ககிரி கோட்டாட்சியர் லோகநாயகி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.