வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமை உயர்தர மாணவர்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு விடுமுறை : மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

2200

வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்கள் என்பவற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (14.06.2023) மதியம் 3 மணியளவில் வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உதவி பிரதேச செயலாளர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வைத்தியர், தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்து கொண்டு சில தீர்மானங்களை மேற்கொண்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்குவதுடன் ஏனைய தினங்களில் மாலை 6.00 மணி வரை மட்டுப்படுத்துமாறு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்தமையுடன் பல்வேறு காரணங்களையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பல வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்கள் என்பன திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை 1 தொடக்கம் தரம் 11 வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மாலை 6.30 மணியுடன் நிறுத்துவதுடன் கா.பொ.த உயர் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மாலை 7 மணியுடன் நிறுத்துமாறும்,

மேலும் ஞாயிற்று கிழமைகளில் தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தமையும் இவற்றை எதிர்வரும் 01.07.2023 ம் திகதி தொடக்கம் அமுல்படுத்தவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தனியார் கல்வி நிறுவனங்களை மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளில் பதிவு செய்வதற்குரிய ஆவணங்களை மேற்கொள்வதுடன் பொது சுகாதார பரிசோதர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்களில் காணப்படும் சுகாதார பிரச்சனை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.