விழுப்புரத்தில்..

`20 நாள்களுக்கும் மேலாக மின்கம்பி அறுந்து கிடந்தபோதும், மின்துறை அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டதால், இளைஞரின் உயிர் அநியாயமாகப் பறிபோய்விட்டது’ என இறந்தவரின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், அறுந்துவிழும் மின்கம்பிகளால் நிகழும் உயிரிழப்புச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி வரை மட்டும் மூன்று மனித உயிர்களும், ஒரு கால்நடையின் உயிரும் பரிதாபமாகப் பறிபோயிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து கோடை வெயில் சுட்டெரித்துவந்த நிலையில், ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பொழிந்துவருகிறது.

அப்படி, கெடார் அருகேயுள்ள சிறுவாலை கிராமத்தில் கடந்த 1-ம் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்திருக்கிறது. அப்போது செல்வராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து மின்துறை ஊழியர்களுக்கு அந்தப் பகுதியினர் தகவல் தெரிவித்த நிலையிலும், மின்கம்பி சரிசெய்யப்படாமல் இருந்துவந்ததாம். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணுபதி என்ற இளைஞர் நேற்று முன்தினம் முதல் காணாமல்போயிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோரும் உறவினர்களும், பல்வேறு இடங்களில் அவரைத் தேடிப் பார்த்திருக்கின்றனர். ஆனால், அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் இருந்துவந்த நிலையில், செல்வராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியில் சிக்கி விஷ்ணுபதி உயிரிழந்துகிடப்பது நேற்றைய தினம் தெரியவந்திருக்கிறது.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கெடார் போலீஸார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.

மேலும், காட்டுப்பன்றி ஒன்றும் இவருக்கு முன்பாகவே அதே மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துகிடந்திருக்கிறது. இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் உயிரிழந்துகிடந்த பன்றியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இது தொடர்பாக கெடார் காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த விஷ்ணுபதியின் குடும்பத்தார், “மின்கம்பி அறுந்து 20 நாள்களுக்கு மேலாக அதே இடத்தில் கிடக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், மின்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

கேட்கும்போதெல்லாம், இங்கு வேலை இருக்கிறது, அங்கு வேலை இருக்கிறது என்று சொன்னார்களே தவிர… இந்த மின்கம்பியைச் சரிசெய்திருந்தால் இன்று ஓர் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

இந்த உயிரிழப்புக்கு இந்த மின்சாரத்துறையும், தமிழக அரசும் என்ன பதில் சொல்லும் எனத் தெரியவில்லை. எனவே இந்த மின்துறையில் ஒழுங்காகப் பணி செய்யாமலிருந்த அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்புக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், விஷ்ணுபதியின் உடலை வாங்க மாட்டோம்” என்றனர்.

அவர்களின் புகாரை ஏற்ற கெடார் போலீஸார், மின்சாரத்துறை ஊழியர்களான பாலு, மணிகண்டன், சரவணன் ஆகியோர்மீது 304/2 பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

`மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்க, விழுப்புரம் மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திர விஜய்யிடம் பேசினோம்.

“மின்கம்பி அறுந்து விழுந்து 20 நாள்களாகவெல்லாம் கிடந்திருக்காது. ஏனெனில், அது போன்று அறுந்து விழுந்தால் விபத்து ஏற்படும் என்பதால், அதிகாரிகள் கட்டாயம் சென்று சரிசெய்துவிடுவார்கள். மூன்று நாள்களாக அந்தப் பகுதியில்தான் வேலை செய்துவந்திருக்கின்றனர்.

அங்கிருந்து யாரும் தகவல் சொல்லவில்லை. தகவல் தெரிந்திருந்தால், ஊழியர்கள் போகாமல் இருந்திருக்க மாட்டார்கள். இந்தச் சம்பவம் குறித்து துறைரீதியாகச் சம்பந்தப்பட்ட மக்களிடமும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்று மின்கம்பிகள் அறுந்துவிழுவதைத் தடுப்பதற்காக, பழைய மின்கம்பிகளைக் கண்டறிந்து, புதிதாக மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.





