பெற்றோரை நெருக்கிய மகனின் கடன்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!

654

திருப்பூரில்..

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே நீதியம்மாள் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் மனைவி அமலோற்பமேரி. இந்தத் தம்பதியின் மகன் சார்லஸ். இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்திவருகிறார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து தொழிலை நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் சார்லஸ் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றிருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் சார்லஸிடம் பணம் கேட்க, அவர் வீரபாண்டி பகுதியில் குடியேறியிருக்கிறார்.

அதனால், பணம் கொடுத்தவர்கள் சார்லஸின் தந்தை அலெக்சாண்டரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்திருக்கின்றனர். இதன் காரணமாக மனமுடைந்த அலெக்சாண்டர், அமலோற்பமேரி தம்பதி, திங்கள்கிழமை இரவு விஷம் குடித்திருக்கின்றனர்.

இதை தன்னுடைய மகன் சார்லஸிடமும் செல்போனில் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து விஷமருந்திய நிலையில், இருவரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். இதில் அலெக்சாண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமலோற்பமேரி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். செவ்வாய்க்கிழமை இரவு அவரும் உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மகன் பெற்ற கடனுக்காக பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.