சொத்தில் பங்கு கேட்ட மனைவி.. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்!!

348

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலத்தில், திருமலாப்புரா கிராமத்தைச் சேர்ந்த சீனிவாஸ், தனது சொத்தில் பங்கு வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியை, நடுரோட்டில் ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருமலாப்புராவைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு சீனிவாஸ் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் குடும்ப சொத்து விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சவிதாவின் வீட்டிற்கு சென்ற சீனிவாஸ் அவரிடம் சொத்தில் பங்கு தர முடியாது என்று தகராறில் ஈடுபட்டார். கண்டிப்பாக தனக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்று சவிதா பிடிவாதம் பிடித்துள்ளார்.

அப்போது சீனிவாஸ் கையில் வைத்திருந்த இரும்பு ராடு மற்றும் அரிவாளால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் இருந்து தப்பி செல்வதற்காக சவிதா ஓடினார். ஆனால் சீனிவாஸ் விடவில்லை. சவிதாவை துரத்தி சென்று தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சவிதா நடுரோட்டில் சுருண்டு விழுந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், சீனிவாசை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த ஆயுதத்தை பறித்தனர். பின்னர் சவிதாவை மீட்டு ஹாசனில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சீனிவாசை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சவிதாவை நேரில் சந்தித்து விசாரித்தனர்.

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹரிராம் சங்கர் கூறியதாவது, சொத்து தகராறில் சீனிவாஸ் இரும்பு கம்பி, மற்றும் அரிவாளால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்து இல்லை. இந்த தாக்குதல் தொடர்பாக சீனிவாசை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.