ஜாதி மாறி காதலித்த மகள்… கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை… ரயில் முன் பாய்ந்த காதலன்!!

754

கர்நாடகாவில்..

வேற்று ஜாதி இளைஞரை காதலித்த மகளை பெற்ற அப்பாவே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். காதலி இறந்ததையடுத்து காதலனும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் போடகுர்கி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது 20 வயது மகள் கீர்த்தி. அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த கீர்த்தி, அதே பகுதியை சேர்ந்த கங்காதர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.



24 வயதான கங்காதர் பட்டியலினத்தை சேர்ந்தவர். தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கங்காதருடனான காதல் விஷயம் கீர்த்தியின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது.

கங்காதர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் காதலுக்கு கீர்த்தியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த திங்கள் கிழமை இரவு கீர்த்தி வீட்டில் பெரியா களேபரமே நடந்ததாக தெரிகிறது.

இருப்பினும் தனது காதலில் உறுதியாக இருந்த கீர்த்தி, கங்காதரை திருமணம் செய்வதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதையடுத்து நேற்றுக் காலை மீண்டும் கீர்த்திக்கும் அவரது தந்தைக்கும் இதுதொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி பெற்ற மகள் என்றும் பார்க்காமல் கீர்த்தியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தனது காதலி மரணமடைந்த தகவலை கேட்ட கங்காதர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்னர் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், வண்டியை நிறுத்துமாறு கூறி இறங்கியுள்ளார். வண்டியில் இருந்து இறங்கிய கங்காதர் கண் இமைக்கும் நேரத்தில் அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்துள்ளார்.

இதில் கங்காதர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கம்மசமுந்த்ரா பகுதி போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்துள்ளனர்.

வேற்று ஜாதி இளைஞரை காதலித்த பெண்ணை அவரது தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் காதலனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போடகுர்கி கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.