வவுனியா ஊடக அமையத்திற்கும் USAID நிறுவனத்திற்கும் இடையில் வலுவூட்டல் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!!

966

வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் (USAID) இடையில் வலுவூட்டல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த ஒப்பந்தம் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, உதவி மாவட்ட செயலாளர் திருமதி சபர்ஜா முகுந்தன் மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், அமெரிக்க நிறுவன திட்டப் பணிப்பாளர் ஜெ.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று (04.07) கைச்சாத்திடப்பட்டது.



அமெரிக்காவைத் தலமையகமாக கொண்டு இயங்கும் குறித்த நிறுவனம் (USAID) பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த மற்றும் போரால் பாதிப்படைந்த நாடுகளுக்கு தனது உதவித் திட்டங்களை வழங்கி வருகின்றனது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா ஊடக அமையத்தின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியா ஊடகவியலாளர்களை வலுப்படுத்தல், ஊடக அமையத்தை மாவட்ட மட்டத்தில் வலுவூட்டல், மாவட்ட மக்களின் காணிப் பிரச்சனை உள்ளிட்டவற்றை தீர்வு நோக்கி நகர்த்துதல்,

தென்பகுதி ஊடகவியலாளர்களுடன் தொழில்சார் தொடர்புகளை பேணல் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் ஊடகம் தொடர்பில் அறிவூட்டல் மற்றும் ஊடகப் பிரிவை ஆரம்பித்து வைத்தல் என்பவற்றை நோக்கமாக கொண்டு குறித்த ஓப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது.

வவுனியா ஊடக அமையம் சார்பாக அதன் தலைவர் ப.கார்த்தீபன் , அமெரிக்க நிறுவனத்தின் சார்பாக அந்த நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஜெ.கார்த்திகேயன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இதற்கு அமைவாக எதிர்வரும் 4 மாதங்களுக்கு குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதில் வவுனியா ஊடக அமையத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.