காய்ச்சலுக்கு ஊசி போட்ட மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

863

திருப்பத்தூரில்…

திருப்பத்தூர் வாணியம்பாடியை அடுத்த ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்கரவர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் (13) நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்து உள்ளான்.



சூரிய பிரகாஷுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள நாயணசெருவு பகுதியில் ஒரு மருத்துவ கிளினிக்கு சென்று உள்ளார். அங்கு மருத்துவராக கோபிநாத் என்பவர் இருந்து உள்ளார். சிறுவனுக்கு, கோபிநாத் தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வீட்டிற்கு சென்றதும் மாணவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றனர்.

அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை இது குறித்து உடனடியாக திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் மருத்துவமனைக்கு சென்ற காவல் துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபிநாத் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை பிடித்து ஊசி போடப்பட்டது குறித்து விசாரித்தனர். அப்போது தான் விஷயம் வெளியே வந்தது. கோபிநாத், லேப் டெக்னீஷியனுக்கு படித்து விட்டு, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சையளித்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து திம்மாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து போலி மருத்துவர் கோபிநாத்தை கைது செய்தனர்.

சக்கரவர்த்திக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். அதில் ஒரே மகனான சூரிய பிரகாஷ் போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற போலி மருத்துவர்களை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.