மத்திய பிரதேசத்தில்..
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தக்காளி ஒரு கிலோ ரூ150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர் மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலையேற்றம் மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சில குடும்பங்கள் உணவில் சேர்க்கும் தக்காளியின் அளவை குறைத்துள்ளன.
உணவகங்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் தயாரிப்பது பல இடங்களில் கைவிடப்பட்டுள்ளது. அதோடு தங்கத்துக்கு நிகராக கருதப்படும் தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள், விவசாயிகள் பாதுகாவலர்களை நியமிக்கும் சம்பவங்களும், அவற்றை பதுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவர், காலை நேர உணவு தயாரித்து வழங்கும் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். விலையேற்றம் காரணமாக சஞ்சீவ் பர்மனும் தக்காளி பயன்பாட்டை குறைத்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சஞ்சீவ் பர்மனின் மனைவி 2 தக்காளியை தனியே எடுத்து வைத்து இருந்தார். இதனை பார்த்த சஞ்சீவ் பர்மன் அதனை எடுத்து ஓட்டலுக்கான உணவை சமைக்க பயன்படுத்தினார். இதுபற்றி அறிந்த அவரது மனைவி கோபமடைந்தார்.
விலையேற்றத்துக்கு நடுவே தன்னிடம் கேட்காமல் ஏன் 2 தக்காளியை சமையலில் பயன்படுத்துகிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பினார். இது வாக்குவாதமாக மாறியது. இந்த வாக்குவாதம் முற்றி எல்லை மீறி சண்டையாக மாறியது. இதனால் கோபமடைந்த சஞ்சீவ் பர்மனின் மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்றார்.
அப்போது அவர் தனது மகளையும் அழைத்து சென்றுவிட்டார். இதற்கிடையே மனைவி வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவார் என சஞ்சீவ் பர்மன் நம்பியிருந்தார். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து அவரை சஞ்சீவ் பர்மன் ஆங்காங்கே தேடிப்பார்த்தார். உறவினர்களிடம் விசாரித்தார்.
அப்போது மகளோடு, மனைவி எங்கு சென்றார் என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இதனால் கவலைக்குள்ளான சஞ்சீவ் பர்மன் சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சஞ்சீவ் பர்மனின் மனைவி மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.