வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் நேற்று (13.07) இரவு 11.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரள கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் ஒருவரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தவலின் குறித்த பேரூந்தினை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தினர்.
இதன் போது பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பேரூந்தின் பயணித்த கடற்படை சிப்பாயை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் குறித்த கடற்படை சிப்பாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் முழங்காவில் புவனேகா முகாமில் பணியாற்றிவரும் 27வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினையும் சந்தேகநபரையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தியமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய மேலதிக நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.