பெங்களூருவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடராயனபுரா அருகே சவுதேமண்டி பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு சச்சின் மற்றும் சரத் என 2 மகன்கள்.
இதில் ஹோட்டல் ஒன்றில் பாஸ்கர் காசாளராக பணிபுரிந்து வந்தார். சாந்தா மத்திய அரசு ஊழியராக பணிசெய்து ஓய்வு பெற்றவர். தின்ட்லு பகுதியில் சச்சின் வசித்து வருகிறார். சரத் மட்டும் பாஸ்கர், சாந்தாவுடன் தங்கி இருந்தார்.
பாஸ்கர் தம்பதியின் சொந்த ஊர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு ஆகும். இதில் சரத் எங்குமே வேலைக்கு செல்லவில்லை. வீட்டின் மாடியில் தனியாக தங்கி இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பாஸ்கருக்கும், சரத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மகன் சரத்தை பணிக்கு செல்லுமாறு பாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத் திடீரென்று வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து பாஸ்கரை கண் மூடித்தனமாக தாக்கி உள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தா தனது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது தாய் சாந்தாவையும் இரும்பு கம்பியால் சரத் தாக்கியுள்ளார்.
தாய் தந்தை இருவரும் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். தந்தை, தாயின் உடலை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு சரத் தப்பி சென்று விட்டார்.
நேற்று காலையில் சச்சின் மொபைலில் தந்தை, தாயுடன் பேச முயன்றார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நேற்று காலை பெற்றோரை பார்க்க சஜித் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாஸ்கரும் சாந்தாவும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சரத்தை வலைவீசி தேடிவருகிறார்கள். அறிவுரை கூறியதால் தந்தை, தாயை பெற்ற மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.