பதுளையில்..
பொலிஸ் தடுப்பில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் ஆர்.ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணம் தொடர்பான மரண விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (26.07) பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த பெண் உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று (26.07.2023) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்படி,
இந்த மரண விசாரணை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவாவினால் நடத்தப்பட்ட சாட்சி விசாரணை இன்று நீதிமன்றில் நிறைவடைந்த நிலையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அதேவேளை பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த பெண், கொழும்பில் வசிக்கும் நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய நிலையில், தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் இருந்தபோது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.