பளை ரயிலில் பயணித்த நபரை மயக்கமூட்டி தங்கச் சங்கிலியை அபகரித்த திருடர்கள்!!

524

Train

கொழும்பில் இருந்து பளை நோக்கி வந்த இரவு ரயிலில் பயணம் செய்த ஒருவர் மயங்கிய நிலையில் ரயில்வே ஊழியர்களால் மீட்கப்பட்டார்.

அவர்கள் வழங்கிய முதலுதவி சிகிச்சையின் பின்னர் குறித்த நபரின் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி களவாடப்பட்டமை தெரியவந்தது.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து பளைக்கு கொக்குவில் கிழக்கை சேர்ந்த குருநாதபிள்ளை பகீரதன் (48) என்பவர் நேற்று முன்தினம் இரவு ரயிலில் பயணித்துள்ளார்.

இடையில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
நல்லவர்களைப் போல நடித்து அருகில் வந்திருந்த சிலர் மயக்க மருந்தை சூட்சுமமாக அவர் மீது வீசி தங்கச் சங்கிலியை திருடிக் கொண்டு மாயமாகிவிட்டனர்.

நடந்தது எதுவுமே தெரியாத பகீரதன் மயக்கம் தெளியாமலே நேற்று காலை பளை ரயில் நிலையம் வரை வந்துள்ளார்.

பயணிகள் அனைவரும் இறங்கியதும், ரயில்வே அதிகாரிகள் அடுத்த பயணத்துக்காக ரயிலை தயார் செய்த போது அங்கு ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அவருக்கு முதலுதவிச் சிகிச்சை வழங்கினர்.

மயக்கம் தெளிந்து எழுந்த பகீரதன், கொழும்பில் இருந்து புறப்பட்ட சில மணித்தியாலயங்களின் பின்னர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாது என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.