ராமேசுவரத்தில்..
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் 270 பேரை கைது செய்யாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்.22-ம் தேதி இலங்கை மன்னார் மாவட்டம் உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரதீப் (32), அவரது மனைவி கஸ்தூரி (29) ஆகியோர் தங்களது 2 குழந்தைகளுடன் அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் முகாமில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், பிரதீப் மண்டபம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு விவரம்: எனது மனைவி கஸ்தூரி `மாடலிங்’கில் நாட்டம் கொண்டவர். இதற்காக சென்னை, திருச்சி போன்ற ஊர்களுக்கு சென்று வருவார்.
ஜூலை 27-ம் தேதி `மாடலிங்’ படப்பிடிப்புக்காக மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு அவரை ரயிலில் அனுப்பி வைத்தேன். சென்னை சென்ற முதல் 2 நாட்கள் மனைவியிடம் பேசினேன். அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
சென்னை சென்று பார்த்த போது மனைவி கொடுத்த முகவரி போலி எனத் தெரியவந்தது. எனவே, அவரை கண்டு பிடித்துத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மண்டபம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தங்கியிருக்கும் மண்டபம் முகாமிலிருந்து வெளியே செல்ல அனுமதி கிடையாது. ஆனால், இலங்கை அகதிப் பெண் அடிக்கடி வெளியூர் சென்று வந்தது குறித்து உளவுத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.