வவுனியா இரட்டைக் கொலைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனங்கள் சிஐடியால் மீட்பு!!

4390

வவுனியாவை அதிரவைத்த இரட்டைக் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாகனங்கள் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,

தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபருக்கு சொந்தமானதும், குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படும் வாகனங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது டிப்பர், பட்டா ரக வாகனம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் என்பன குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை (16.08) மீட்கப்பட்டுள்ளன.

குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரணை பிரிவினரின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மொடில் ரஞ்சலமரகே ஆலோசனைக்கு அமைவாக செயற்பட்டுவரும் பொலிஸ் பரிசோதகர் இக்பால்,

பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ் கான்ஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து கைப்பற்றிய வாகனங்களை நீதவான் முன்னிலையில் மன்றுக்கு முற்படுத்தியுள்ளனர்.