
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றுகின்றவரை இதுவரை காலமும் அழைக்கப்பட்டு வந்த அலுக்கோசு என்ற பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது குறித்த பதவிக்கான பெயரானது “உயிர் எடுப்பவர்” என்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகள் திணைக்களம் அலுக்கோசு என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயர்களை பிரேரிக்குமாறு கோரியிருந்தது. அதனடிப்படையில் மக்களிடமிருந்து 200 பெயர்கள் கிடைக்கப்பெற்றன.
சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவினர், அந்த பெயர்களில் இருந்து உயிர் எடுப்பவர் என்ற பெயரைத் தெரிவு செய்துள்ளனர்.
நபரொருவரை தூக்கிலிடும் அதிகாரியின் பதவிக்கு அலுக்கோசு என்ற பெயர்கொண்டு அழைக்கின்ற போது அவரின் பதவிக்கும் அவருக்கும் ஏற்படுகின்ற அபகீர்த்தியை ஒழிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.





