உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலம் புலாந்த்ஷர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று அங்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 25ம் தேதி ராம்பூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மீண்டும் புலாந்த்ஷரில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். திடீரென அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று சராமாரியாக இளைஞரைத் தாக்கத் தொடங்கியது. அத்துடன் அவருக்கு மயக்கமருந்தையும் வலுக்கட்டாயமாக் கொடுத்தது.
இளைஞர் மயக்கம் அடைந்த பின்பு, அவரது பிறப்புறுப்பை அக்கும்பல் அறுத்து உள்ளது. பின்னர், பாதிக்கப்பட்ட இளைஞர் மயக்க நிலையில் இருந்து சுயநினைவுக்கு திரும்புவதற்குள் அக்கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டது.
சுயநினைவு திரும்பியதும் அந்த இளைஞர், இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆகஸ்ட் 31ம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், சவான்னி, அனிதா, முஷகன், ஷிவம், சிம்ரன் மற்றும் காயத்ரி ஆகிய 6 பேரை சந்தேகத்தின் பேரில் அடையாளம் கண்டுள்ளது.
மேலும் இது குறித்து சிவில் லைன் வட்டார அலுவலர் , “ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தும் இரு கும்பலுக்கு இடையே பகுதியைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது” என தெரிவித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்ற பின், தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இச்சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.