
மத்தியபிரதேசத்தில் கணவர் உள்பட 10 பேர் கொண்ட கும்பலால் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலாய் போர்கேடி என்ற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பழங்குடியின பெண் ஒருவர் கணவர் உள்பட 10 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
நிலவிவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.
இதனையடுத்து, அந்த பெண்ணை கணவன் கோடாரியால் தாக்கியுள்ளான். இதில் காயம் அடைந்த பெண் பொலிசில் புகார் கொடுத்துவிட்டு, தனது மகனுடன் அருகே உள்ள கிராமத்தில் தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் அந்த கணவர் இருவரும் சமாதானமாகிவிடுவோம் என்று கூறி மனைவியை வீட்டிற்கு அழைத்தபோது, அதனை உண்மை என்று நம்பி தனது மகனுடன் அந்த பெண், கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்ததையடுத்து, கணவன் உட்பட 10 பேர் அந்த பெண்ணை கயிறால் கட்டி ஒரு அறையில் அடைத்து கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார், ஆனால் அந்த கொடூர கும்பல் மனித சிறுநீரை குடிக்க வற்புறுத்தியதோடு, அந்த பெண்ணை அரைநிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து அந்த 10 பேரையும் பொலிசார் பாலியல் பலாத்கார குற்றத்தில் கைது செய்துள்ளனர்.
மேலும் பொலிசார் இதுபற்றி கூறுகையில், கணவரின் வீட்டில் 3 நாட்கள் அடைத்துவைத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார் என்றும் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.





