மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து தானும் விபரீத முடிவெடுத்த கணவன்!!

679

கேரளாவில்..

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பாரிப்பள்ளி நாவாயிக்குளம் பகுதியில் வசித்து வருபவர் ரஹீம். 50 வயதான இவர் சென்ட்ரிங் தொழிலாளி. இவருடைய மனைவி நாதிரா .



இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாதிரா பாரிப்பள்ளியில் உள்ள ஒரு இ-சேவை மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே நாதிராவின் நடத்தையில் ரஹீமுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று நாதிரா வழக்கம் போல் இ-சேவை மையத்திற்கு பணிக்கு சென்று விட்டார். அங்கு அவர் பணியில் இருந்த போது ரஹீம் திடீரென பெட்ரோல் கேனுடன் இ-சேவை மையத்திற்குள் நுழைந்தார்.

நாதிரா திரும்பி பார்ப்பதற்குள் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இ சேவை மையத்தில் அவருடன் இருந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திகுதிகுவென பற்றி எரியத் தொடங்கிய தீயின் உக்கிரம் தாளாமல் நாதிரா அலறி துடித்தார். சக ஊழியர்கள் காப்பாற்ற முயற்சித்தும் சிறிது நேரத்தில் நாதிரா உடல் கருகி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியை கொன்றதும் அங்கிருந்து தப்பி ஓடிய ரஹீம் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடத்தை சந்தேகத்தால் மனைவியை எரித்துக் கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஹீம் ஆகஸ்ட் மாதம் மனைவியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் ஆத்திரத்தில் இ-சேவை மையத்துக்குள் புகுந்து மனைவியை எரித்து கொலை தானும் தற்கொலை செய்து கொண்டார்.