கன்னியாகுமரியில்.
கன்னியாகுமரி தட்டான்விளை பெருமாள் நகரில் வசித்து வருபவர் பிரவீன். இவர் மர வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ரூபா. இவர்களுக்கு 3 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பிரவீனுக்கு மர வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனை ஈடுசெய்யவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் கடன் வாங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கி தொழிலை விரிவு படுத்தியும் எந்த லாபமும் இல்லை. இதனால் கடனை கட்டமுடியவில்லை.
கடனை செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதன் பேரில் இரவு வீட்டில் இருந்த பிரவீன், தன் மனைவி ரூபாவுக்கும் தென்னைக்கு வைக்கும் பூச்சி மருந்தை கொடுத்து குடிக்க சொல்லி விட்டு தானும் அதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
சிறிது நேரத்தில் ரூபா மயங்கியதால் பிரவீன், தன் மனைவி உயிரிழந்துவிட்டதாக கருதி கதறி அழுதுள்ளார். மேலும் அப்பகுதியினரிடமும் இது குறித்து கூறியதால், இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரூபா நேற்று உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரவீனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிரவீனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடன் பிரச்சினையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.