யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு வாள்வெட்டு : இளைஞன் பலி : பெருமளவு படையினர் குவிப்பு!!

598

யாழ்.கோண்டாவில் பகுதியில் இளைஞர்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாகிய மாறியிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், கோண்டாவில், உரும்பிராய் பகுதிகளில் படையினரின் பாதுகாப்பு போடப்பட்டு மக்கள் நடமாட்டம் முழுமையாக தடுக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கோண்டாவில் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்கள் சிலரை அந்த வழியால் மோட்டார் சைகளிலில் வந்த மற்றொரு இளைஞர் குழு தள்ளி கீழே விழுத்தி விட்டுச் சென்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வீதியில் நின்ற இளைஞர்கள், தம்மை தள்ளிவிட்டுச் சென்ற இளைஞர்களை துரத்திப் பிடித்து தாக்கியதில் இரு இளைஞர்கள் மிகமோசமான காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த இளைஞர்களின் ஆதரவுக் குழு, கோண்டாவில் பகுதியில் குறித்த இளைஞர்களை தாக்கியவர்களின் வீட்டிற்குள் புகுந்து நடத்திய வாள்வெட்டில் ரவீந்திரன் சுகிந்தன் (20) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், குறித்த இளைஞரின் சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோரும் வாளால் வெட்டப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை நடத்தியவர்கள் உரும்பிராய் சிவபுரம் வீதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், இரவு 7மணியளவில் கோண்டாவில் பகுதியிலிருந்து சென்ற குழு உரும்பிராய் பகுதியிலிருந்து வந்து தாக்கியதாக நம்பப்படும் இளைஞர்களின் வீடுகளை அடித்து நொருக்கியுள்ளதுடன், வீட்டிலிருந்தவர்களையும் மோசமாக தாங்கியுள்ளனர்.

இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கோப்பாய் பொலிஸார் சென்றிருந்த நிலையில் இரு ஊர் சண்டையாக அது மாறியதனால் தம்மால் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக கூறி பொலிஸார் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், உரும்பிராய் சிவபுரம் வீதி மற்றும் கோண்டாவில் அரசடி வீதி ஆகிய பகுதிகளில் மேலதிக பாதுகாப்புக்காக பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரு பகுதிகளிலும் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்க்குமாறு படையினர் கூறிவருகின்றனர்.

குறித்த இரு கிராமங்களும் தற்போது ஊரடங்கு நிலையில் இருப்பதுபோன்ற நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதுடன், உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளேயும் செல்ல படையினர் தடை விதித்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

J1 J2