1.5 லட்சம் மதிப்புள்ள உரிமையாளரின் தாலியை உணவுடன் சேர்ந்து விழுங்கிய எருமை மாடு!!

923

மகாராஷ்டிராவில்..

உணவுடன் சேர்ந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தாலியை விழுங்கிய எருமை மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தாலி வெளியே எடுக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் வாசிம் நகரில் அமைந்துள்ளது சார்சி என்ற கிராமம். இங்கு கீதாபாய் போயர் என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.



இவரது வீட்டில் எருமை மாடு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மாட்டுக்கு கீதாபாய் தான் உணவு வைத்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த செப்., 27-ம் தேதியும் இரவு நேரத்தில் இந்த மாட்டுக்கு சோயாபீன் அடங்கிய உணவை வைத்துள்ளார்.

பின்னர் அவரது வீட்டிற்குள் சென்றுவிட்டார். மறுநாள் காலை எழுந்து பார்க்கையில் அவரது கழுத்தில் இருந்த தாலி திடீரென காணாமல் போயுள்ளது. இதனை அவர் தேடியுள்ளார்; ஆனால் கிடைக்கவில்லை.

எனவே அவரது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். பின்னர் அனைவரும் சேர்ந்து தேடியுள்ளனர். வீட்டின் அனைத்து பகுதிகளில் தேடியும் தாலி கிடைக்கவில்லை. இதையடுத்தே அவருக்கு தான் இரவு உணவு வைக்கும்போதுவ் வரைக்கும் கழுத்தில் தாலி இருந்தது நினைவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து மாட்டின் அருகே சென்றும் தேடியுள்ளனர். அப்படியும் கிடைக்கவில்லை. எனவே, ஒருவேளை மாட்டின் உணவோடு விழுந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவரால் மெட்டல் டிடெக்டரை வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது மாட்டின் வயிற்றுக்குள் செயின் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செப்.28-ம் தேதி மாட்டுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகே, ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தாலி வெளியே எடுக்கப்பட்டது.

மாட்டுக்கு சுமார் 60 -70 தையல்கள் போடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மாடு நலமுடன் இருப்பதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

சாப்பாடு கொடுக்கும்போது தவறுதலாக மாட்டின் உணவில் தாலி கழன்று விழுந்திருக்கலாம் எனவும், பின்னரே மாடு அதனை சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம் எனவும் கூறபடுகிறது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.