கொழும்பில் இன்று பயணிகள் பேருந்து மீது முறிந்து வீழ்ந்து விபத்தை ஏற்படுத்திய மரம் 100 வருடங்கள் பழமையானது என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
100 வருடங்கள் பழமை வாய்ந்த ரொபரோஸியா வகையான மரம் ஒன்றே பேருந்தில் முறிந்து வீழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த மரத்தை அகற்ற வேண்டும் என எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
குறித்த மரங்களின் தன்மை தொடர்பில், ஆராய்ந்து அதனை அகற்றுவது தொடர்பில், எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியில் லிபெட்டி பிளாசா அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்தமையால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெனியாயவிலிருந்து கொழும்பு வந்து கொழும்பிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.