கண்டியில்..
நேற்று மாலை கண்டி தெல்தோட்டை லிட்டில்வெளி பகுதியிலுள்ள ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்று மதியம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு மாணவன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இடத்தில் இன்று காலை சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சுதுவெல்ல கிராமசேவைக்குட்பட்ட இந்த ஓடையின் குறுக்கே நான்கு மின்கம்பங்களைப் பயன்படுத்தி கிராம மக்களால் கட்டப்பட்ட சிறிய பாலம் உள்ளது.
இருபுறமும் பாதுகாப்பு பிடி இல்லாமல் குச்சி போல் உள்ள இந்த பாலத்தின் மீது சிறு குழந்தைகள் உள்ளிட்ட கிராம மக்கள் கடந்து செல்வது மிகவும் ஆபத்தான பயணம் என்கின்றனர் மக்கள். இதில் மற்றுமொரு உயிர் பறிபோகாமல் இருப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.