கடலூரில்..
கடலூரில் எஞ்சினீயர் முதல் திருமணத்தை மறைத்து 2வதாக ரகசிய திருமணம் செய்தார். இதையறிந்த முதல் மனைவி, மண்டபத்தை முற்றுகையிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததால் மணப்பெண் தாலியை கழட்டி வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். 25 வயதான இவர் பி.இ சிவில் இஞ்சினீயரிங் படித்துவிட்டு துபாயில் வேலைபார்த்து வந்துள்ளார்.
வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகாவும், விக்னேஷும் 2016ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சாதி என்பதால் இவர்களின் காதலுக்கு விக்னேஷ் வீட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கார்த்திகாவை 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி திண்டுக்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார் விக்னேஷ்.
அதன்பிறகு திட்டக்குடியை அடுத்த ஆவட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து கார்த்திகாவும் விக்னேஷும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே கடந்த ஆண்டு மே மாதம் வேலைக்காக விக்னேஷ் துபாய் சென்றுவிட்டார். கடந்த மாதம் மீண்டும் ஊர் திரும்பிய நிலையில், கார்த்திகாவுடன் அவ்வப்போது தங்கி வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பெற்றோரை பார்த்து வருவதாகக் கூறி ஊருக்கு சென்ற விக்னேஷ், அதன் பிறகு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே பெற்றோர் தனக்கு பார்த்து வைத்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணை கார்த்திகாவுக்கு தெரியாமல் கோயிலில் வைத்து ரகசியமாக 2வது திருமணம் செய்துள்ளார்.
அதன்பிறகு எறையூர் கிராமத்திலுள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்துள்ளது. விக்னேஷுக்கு திருமணம் என்பதை அவரது நண்பர் மூலமாக கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகா, உடனடியாக வரவேற்பு நடைபெற்ற திருமண மண்டபத்திற்குள் நுழைந்து தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும், தனக்கும் விக்னேஷுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று கூறி கதறி அழுதார். இது மணமகள் வீட்டாருக்கு இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்த மங்களமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரித்த நிலையில், விக்னேஷ் கார்த்திகாவை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தியது உறுதியானது.
இதனையடுத்து, 2வது திருமணம் செய்து ஏமாற்றிய விக்னேஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மணப்பெண், என்னை ஏன் ஏமாற்றினாய் எனக் கூறி கட்டிய தாலியை கழற்றி விக்னேஷின் முகத்தில் ஆவேசமாக வீசியெறிந்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட விக்னேஷை 15 நாட்கள் காவலில் வைக்க குன்னம் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.