புற்றுநோயால் உயிரிழந்த இலங்கைத் தமிழர் : மரணத்துக்குமுன் மனைவியிடம் எழுதிக்கொடுத்த வார்த்தைகள்!!

1055

பிரித்தானியாவில்..

புற்றுநோயால் உயிரிழந்த இலங்கைத் தமிழரான பிரபல ஊடகவியலாளர் ஜார்ஜ் அழகையாவுக்கு, நேற்று ஏராளமானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இலங்கையில் பிறந்து, பிரித்தானியாவில் பிபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசித்துவந்தவர் ஜார்ஜ் அழகையா (67).

அழகையா, 2014ஆம் ஆண்டு குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மீண்டும், மீண்டும் புற்றுநோய் தொல்லை கொடுத்த நிலையிலும், சிகிச்சைக்குப் பின் பணிக்குத் திரும்பிய அழகையாவுக்கு மீண்டும் 2021ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

ஜூலை மாதம் 24ஆம் திகதி, அன்பிற்குரியவர்கள் சூழ, அழகையாவின் உயிர் அமைதியாகப் பிரிந்தது. நேற்று, ஏராளமான பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் கூடி அழகையாவுக்கு இறுதி பிரியாவிடை கொடுத்தார்கள்.

St Martin-in-the-Fields church என்னும் தேவாலயத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், கண்ணீர் மல்க, அவர்கள் தங்கள் சக ஊடகவியலாளர், நண்பருக்கு புகழாரம் சூட்டினார்கள்.

மரணத்துக்குமுன் மனைவியிடம் எழுதிக்கொடுத்த வார்த்தைகள்
அஞ்சலி நிகழ்ச்சியில், அழகையாவுடன் பணி புரிந்த Sophie (55) என்னும் ஊடகவியளாளர், அழகையா முன்பு எழுதிக்கொடுத்த சில வார்த்தைகளை கூடியிருந்தோர் முன் கண்ணீர் மல்க வாசித்தார்.

அழகையா மரணமடைவதற்கு மூன்று வரங்களுக்கு முன், தன் மனைவியாகிய Frances Robathanஇடம் எழுதிக்கொடுத்த இறுதி வார்த்தைகள் அவை.  “நீங்கள் நேசிக்கும் மக்களிடம், நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏற்கனவே சொல்லவில்லை என்றால், அவர்களிடம் சொல்லுங்கள்.

நீங்கள் சில சமயங்களில் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்களாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏற்கனவே அவர்களிடம் சொல்லவில்லை என்றால், அவர்களிடம் சொல்லுங்கள்.

வீட்டிலிருக்கும் படிக்கட்டுகளே, கண்களுக்கு பெரிய மலை போல் தெரியும் நிலை வரும் வரை அவர்களுடன் இருக்க விரும்புவதாக நீங்கள் அவர்களிடம் சொல்ல விரும்பினால், அவர்களிடம் சொல்லுங்கள்.

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்து உங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை என்றால், நல்லது, குறைந்தபட்சம் உங்கள் அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததற்காக சந்தோஷப்படுங்கள்”

1955ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22ஆம் திகதி, இலங்கைத் தமிழர்களான Donald Alagiah, Therese தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் அழகையா. கொழும்பில் பிறந்து, லண்டனில் வாழ்ந்துவந்த அவருக்கு, Frances Robathan என்னும் மனைவியும், Adam மற்றும் Matthew என்னும் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.