செயலி மூலம் கொண்டு வரப்பட்ட இதயம்… வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை!!

539

கேரளாவில்..


கேரளாவில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ரகுமான். இவருக்கு வயது 38. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் கோவை பந்தய சாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரகுமானின் இதயத்தில் உள்ள வால்வுகளின் இயக்கம் குறைந்து விட்டன எனவும் ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு இருதயம் செயலிழந்து இறுதி கட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுமானுக்கு இருதய மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் கையை விரித்து விட்டனர்.

இந்நிலையில் ஈரோடு பெருந்துறையில் வசித்து வரும் மஞ்சுளா என்ற பெண்,சாலை விபத்தில் அடிபட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்டோபர் 4ம் தேதி மூளை சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனர். செயலி மூலம் மஞ்சுளாவின் இதயம் தானமாக அளிக்கப்பட இருப்பதை அறிந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சைக்கான உபகரணங்களை எடுத்து கொண்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அங்கு அரசு மருத்துவர்களின் உதவியோடு மஞ்சுளாவின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். மஞ்சுளாவின் இதயம் மருத்துவ துறை, காவல்துறை, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உதவியுடன், 50 நிமிடத்தில் மின்னல் வேக பயணத்தில், பெருந்துறையில் இருந்து கோவை கேஜி மருத்துவமனைக்கு வந்தடைந்தது.

மயக்கவியல் துறை மருத்துவர்கள் உட்பட 60 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர்.இதுகுறித்து இதயற்று அ மாறுவை சிகிச்சை மருத்துவர் அருண் ” தமிழக அரசின் விடியல் செயலியால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

ஒரே மருத்துவமனையில் இருந்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதே கடினம் என்ற நிலையில், வெகுதூர பயணத்தை காவல்துறையும் மருத்துவத்துறையும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியதாக தெரிவித்தார்.

ரகுமானுக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்களுக்கு ரகுமானின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்து கொண்டனர். மேலும் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.