ஆறு பந்துகளுக்கு ஆறு விக்கெட்டுக்கள்.. மைதானத்தை அதிரவிட்ட வீரர்!!

449

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்டின் பிரீமியர் லீக் பிரிவு கிரிக்கெட் போட்டியில், அணி ஒன்று இறுதி ஓவரில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி, போட்டியில் வெற்றி பெற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

முட்கீரபா அணிக்கு எதிரான போட்டியில் சேர்ஃபர்ஸ் பெரடைஸ் அணி, 179 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில், இறுதி ஓவரில் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 5 ஓட்டங்களே தேவைப்பட்டன.

எனினும் முட்கீரபா அணித்தலைவர் கரேத் மோர்கன், இறுதி ஓவரின் ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, சாத்தியமில்லாத வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளார். தாம் இறுதி ஓவரில் பந்துவீச ஆரம்பித்த போது, போட்டியின் நடுவர், போட்டியில் வெற்றி பெறவேண்டுமானால், ஹெட்ரிக் ஒன்றையாவது எடுக்க வேண்டும் என்று முட்கீரபா அணியின் தலைவரிடம் வேடிக்கையாக கூறியுள்ளார்.

எனினும் 6 பந்துகளில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பின்னர், அந்த நடுவர் தம்மை வியப்பாக நோக்கியதாக முட்கீரபா அணித்தலைவர் கரேத் மோர்கன் தெரிவித்துள்ளார்.

குறித்த 6 விக்கெட்டுக்களில் 4 விக்கெட்டுகள் பிடி எடுக்கப்பட்டும், இருவர் போல்ட் முறையிலும் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டனர். இந்தநிலையில் இறுதி விக்கெட்டு வீழ்த்தப்பட்டபோது, சேர்ஃபர்ஸ் பெரடைஸ் அணி, 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

முன்னதாக தொழில்முறை கிரிக்கெட்டில் ஒரே ஓவரில், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தமது அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர்கள் பட்டியலில், 2011 இல் நீல் வாக்னர், 2013இல் பங்களாதேஸின் அமின் ஹூசைன் மற்றும் இந்திய கர்நாடக அணியின் அபிமன்யு மிதுன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.