தாலியை அறுத்தெறிந்து விரட்டியடித்த உறவினர்கள் : இளம்பெண் விபரீத முடிவு!!

544

ராஜபாளையத்தில்..

ராஜபாளையம் அருகே கட்டிய தாலியை அறுத்தெறிந்து காதல் கணவரை, உறவினர்கள் பிரித்து அழைத்து சென்றதால் மன வருத்தத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையத்தை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று ரகசியத் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இதையறிந்த உறவினர்கள், காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இளம்பெண்ணை விரட்டியடித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த இளம்பெண், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 24), தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்‌.

இவரும், சோழபுரத்தை சேர்ந்த மாரீஸ்வரி (வயது 20) என்பவரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாரீஸ்வரி தனியார் ஆலையில் கூலி வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பும் என பயந்த ஜோடிகள், கடந்த 15-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர்.

தொடர்ந்து, தம்பதிகளாக கொடைக்கானலுக்கு சென்ற காதல் ஜோடிகள் அங்கு இரண்டு நாள்கள் தங்கி இருந்துள்ளனர். இதன்பின் ஊர்திரும்பிய தம்பதியினர் சொந்த ஊருக்கு வராமல் தென்காசி மாவட்டம் பச்சேரியில் உள்ள சசிக்குமாரின் சித்தி முனியம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு உறவினர்களிடம் பேசிய சசிக்குமார், ‘நடந்த திருமணத்திற்கு பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிவிட்டு தன் மனைவி மாரீஸ்வரியை அழைத்து செல்கிறேன். அதுவரை பாதுகாப்புக்காக இங்கேயே இருக்கட்டும்’ என கூறிவிட்டு தேவிப்பட்டினத்திற்கு திரும்பியிருக்கிறார்.

இதையறிந்த சசிக்குமாரின் பெற்றோர், மகனின் ரகசிய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த சசிக்குமார், ‘தனது மனைவி மாரீஸ்வரியை அழைத்துவருவதற்காக மீண்டும் சித்தி வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது சசிக்குமாரை வீட்டில் வைத்து பூட்டிய உறவினர்கள், மாரீஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரை தாக்கி மாரீஸ்வரியின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்தெறிந்து வீட்டை விட்டு வெளியே துரத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடந்த விவரங்களை போன் மூலம் பெற்றோரிடம் எடுத்துக்கூறி மாரீஸ்வரி அழுதிருக்கிறார். இதையடுத்து பதறிப்போய் வந்த அவரின் பெற்றோர், மாரீஸ்வரியை சோழபுரத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

கணவரை பிரிந்து சோகத்தில் இருந்துவந்த மாரீஸ்வரி, மனம் உடைந்து பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் மாரீஸ்வரியை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காதல் கணவரை சசிக்குமாரை மீட்டுத்தரக்கேட்டு தளவாய்புரம் போலீஸில் மாரீஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் சசிகுமார் சித்தி முனியம்மாள், சித்தப்பா கனகராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.