சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து தேயிலைத்தூளில் தங்கத்தை கலந்து கடத்தி வந்த இலங்கை இளைஞனை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த ஞானமதிகுமார் என்பவர் வந்தார். இவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார்.
இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அங்கு தேயிலைத்தூள் இருந்தது.
அதை பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை பொடியாக்கி அதில் கலந்து கடத்திக்கொண்டு வந்தது தெரியவந்தது. டீத்தூளில் இருந்து 15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினார்கள்.