பாம்பு தீண்டியதால் ஆறு மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!!

950

மட்டக்களப்பில்..

ஆறு மாத குழந்தை ஒன்று விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.குறித்த சமபவம் மட்டக்களப்பு – ஆரையம்பதி பற்றிமாபுரத்தில் நேற்று (24.11.2023) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத வயதை கொண்ட ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவியுள்ளது.

தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நேற்று அதிகாலை பாம்பு தீண்டி இருக்கிறது உள்ளது. காலை மயக்க நிலையில் இருந்த குழந்தை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு குழந்தை இறந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே பாம்பு வீட்டினுள் நுழைந்து குழந்தையை தீண்டி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. குழந்தையை தீண்டிய பாம்பினை அயலவர்கள் அடித்துக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.