மெய்யான தலைவர்கள் என அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது புகைப்படங்கள் தாங்கிய பாதாதைகளை அகற்றமுற்ப்பட்ட அரசியல் கைதி செ.அரவிந்தன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதுடன், பொலிஸ் பாதுகாப்புடன் பதாதைகள் மீளவும் வைக்கப்பட்டது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு மிக
அருகாமையில் தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மெய்யான தலைவர்கள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறித்த பதாதைகளில் விடுதலைப் புலிகளால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தது.
குறித்த பதாதைகள் மக்கள் மத்தியில் குழப்பநிலையினை ஏற்ப்படுத்தும் என்ற காரணத்தினால் அரசியல் கைதியும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன் குறித்த பகுதிக்கு சென்று இவற்றை இங்கு யார் வைத்தது இதனை உடனடியாக அகற்றுமாறு தெரிவித்தார்.
இதன்போது அங்கிருந்த இருவர் தாங்களே இதனை வைத்ததாகவும் இப்படி செய்யுமாறு சிலர் பணித்தமையால் இதனை செய்தோம். அதனைவிட வேறு எதுவும் தமக்கு தெரியாது என்று கூறியதுடன், பதாதைகளையும் அகற்றினர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் பதாதைகளை வைத்தவர்களின் மீது நடவடிக்கையினை எடுக்காமல். அரசியல் கைதியான அரவிந்தனை அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
அத்துடன் குழப்பநிலை முடிவிற்குவந்ததும் குறித்த பகுதியில் போக்குவரத்து பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், அவர்களின் பாதுகாப்புடன் அகற்றப்பட்ட பதாதைகள் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.