கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலத்தில், கந்து வட்டிக் கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் கந்து வட்டி கடனாக வாங்கியிருந்த கறிக்கடை நடத்தி வந்தவர், தனது 3 குழந்தைகளையும் கொன்று விட்டு, மனைவியுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், தும்கூர் சதாசிவா நகரைச் சேர்ந்தவர் கரீப் சாப். இவரது மனைவி சுமையா. கரீப் சாப், சதாசிவா நகர் பகுதிய்ல் கறிக்கடை நடத்தி வந்தார். இந்த தம்பதியருக்கு ஹாஜிரா என்ற மகளும், முகமது சுபான், முகமது முனீப் என்று இரு மகன்களும் இருந்தனர்.
கறிக்கடையில் போதுமான வருமானம் இல்லாததால் கரீப், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் 1 லட்சம் ரூபாய் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், கரீப் நடத்தி வந்த கறிக்கடையில் விற்பனை இல்லாததால் கடன் கொடுத்தவர்கள் கரீப்புக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த கரீப், இதுகுறித்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் இணைந்து குழந்தைகளைக் கொன்று விட்டு, தாங்களும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடித்தனர்.
அதன்படி நேற்றிரவு விஷம் கலந்த உணவை குழந்தைகளுக்கு கொடுத்தாகக் கூறப்படுகிறது. விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்ததை முடிவு செய்த தம்பதி, வீட்டின் ஹாலில் முகத்தை மூடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பு கரீப் தனது உறவினர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில் கந்துவட்டியால் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார்.
இதுகுறித்து தெரிய வந்ததும் திலக்பார்க் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கரீப் சாப் வெளியிட்ட வீடியோ மற்றும் உருக்கமான கடிதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.