திருமணத்தன்றே மனைவி மாமியார் உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற மணமகன் : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!

221

தாய்லாந்தில்..

தாய்லாந்தில், திருமணத்தன்றே மணமகள், மாமியார் உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற மணமகன், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, தாய்லாந்தின் Wang Nam Khieo மாகாணத்தில், சுசுக் (Chaturong Suksuk, 29) என்பவருக்கும் காஞ்சனா (Kanchana Pachunthuek, 44) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்து பார்ட்டி நடந்துகொண்டிருக்க, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேகமாக வீட்டுக்குச் சென்ற சுசுக், தனது துப்பாக்கியுடன் திரும்பிவந்துள்ளார்.

அவர் குடிபோதையிலும் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மணமகள் காஞ்சனாவையும், மாமியார் Kingthong Klajorho (62), மணமகளின் தங்கை Kornika Manator (38) ஆகியோரையும் அவர் துப்பாக்கியால் சுட, குண்டுகள் திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் இருவர் மீதும் பாய்ந்துள்ளன.

துப்பாக்கியால் சுடப்பட்ட மணமகள், மாமியார், மணமகளின் தங்கை, குண்டு பாய்ந்த விருந்தினர்களில் ஒருவரான Thong Nonkhunthod ஆகிய நால்வரும் உயிரிழந்துவிட்டனர்.

பின்னர், சுசுக் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொள்ள, திருமண வீட்டில் ஐந்து பேர் பலியானார்கள். காஞ்சனா, சுசுக்கைவிட 15 வயது பெரியவர். இதனால் சுசுக் அசௌகரியமாக உணர்ந்ததாகவும், அதுதான் பிரச்சினைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

காஞ்சனாவும் சுசுக்கும் திருமணத்துக்கு முன்பே மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்கள். அப்படியிருக்கும் நிலையில், சுசுக் திருமண நாளன்று இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள் பொலிசார்.