கனடாவில் இலங்கைத் தமிழர் கொலை!!

432

Canada

கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் 7745 மவுண்டன் சைட் பகுதிக்கு சற்று வடக்கில் உள்ள பார்ரோ பிரதேசத்தில் கோட் டஸ் நெகேஸ் என்ற பகுதியில் கடந்த திங்கட் கிழமை இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான மாணிக்கராஜா உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில், உணவகத்திற்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் கிடந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளன.

அருகில் உள்ள தொடர்மாடி வீடமைப்பு கட்டிடத்தை சுற்றிவளைத்த பொலிஸார், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்தனர். முக்கோண காதல் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.

தனது தந்தையை ஒருவர் கட்டிடத்திற்கு கீழே அழைத்து வந்து மலை பகுதிக்கு இழுத்துச் சென்றதை தான் கண்டதாக கொலை செய்யப்பட்டவரின் மகனான அபிசாத் மாணிக்கராஜா மொன்றியல் ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட மாணிக்கராஜா மற்றும் கொலைச் சந்தேக நபர் ஆகியோர் மொன்றியலில் உள்ள இலங்கை சமூகத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவரின் சகோதரும் அதே பிரதேசத்திலேயே வசித்து வருகின்றார்.

மாணிக்கராஜாவின் மரணத்தினால் மக்கள் பலர் துயரத்தில் அழுவதாகவும் அவர் கனடாவுக்கு வந்த நாள் முதல், ஆலயம், விளையாட்டு, சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்ததாக அவரது சகோதரரான சிவகணேஷ் மாணிக்கராஜா கூறியுள்ளார்.

தனது தாய் வீட்டின் பல்கனியில் இருந்து பார்த்த போது, தந்தையை போன்ற ஒருவரை மற்றுமொருவர் தாக்குவதை கண்டுள்ளதாகவும் இறுதியில் தேடி பார்த்த போது அவர் கீழே விழுந்து கிடப்பதை கண்டுள்ளதாகவும் மாணிக்கராஜாவின் மகளான திவ்யபிரிய ஜெயராசன் தெரிவித்துள்ளார்.

2000 ஆம் கனடாவுக்கு அகதியாக வந்த தமது தந்தை ஒரு நட்பாக பழகும் குணம் கொண்டவர் எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்மாடி குடியிருப்பில் அடுத்த வீட்டில் வசித்து வந்த 34 வயதான சந்தேக நபர், தனது இளம் மகளுடன் அமைதியாக வசித்து வந்தவர் என அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை மொன்றியல் தீவில் இடம்பெற்றுள்ள 13 கொலைகளுடன் இந்த கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மொன்றியல் பொலிஸார், இந்த வாரம் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக மொன்றியல் பொலிஸின் ஊடக தொடர்பு அதிகாரி பிரான்ஸ்கொஸ்ஸ் கொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

620-100 Final