தென்காசியில்..
விநோதமான ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் விநோதமான வகையில் தலைக்கவசம் அணிந்தபடி வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், மேற்கொண்டு அபம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த வாலிபரை போலிசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் காவல் ஆணையர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குற்றாலம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்தனர்.
இதனையடுத்து விநோதமாக தலைக்கவசம் அணிந்த அந்த நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த நபர் தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (வயது 23) என தெரியவந்தது.
இதையடுத்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விகித்தனர். மேலும் அவரின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.