வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

540

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் இன்று(02.12.2023) போராட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா ஊடகஅமையத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கருத்துதெரிவித்த ஊடகவியலாளர்கள்…

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புக்கள் தமிழ் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர் கதையாகவே
இருந்து வருகின்றது.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் அதிகாரத்தரப்பின் வன்முறைகளால் 39 ஊடகவியலாளர்களின் இன்னுயிர்களை நாம் இழந்துள்ளோம். அதற்கான நீதி மறுக்கப்பட்டநிலையில் இன்றும் நீதி கோரி போராடிவருகின்ற தரப்பாக நாம் இருக்கின்றோம்.

இதேவேளை மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் இவ் அரசாங்கம், ஊடகங்களை ஒடுக்கி, மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன் வவுனியாவில் கடமையாற்றிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றார்கள். எனவே ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்கள் ஆகியநாம் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்பதை அதிகாரத்தரப்பிற்கு தெரிவித்துக்கொள்கின்றோம் என்றனர்.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஊடக சுதந்திரத்தை. உறுதிசெய், பொய்வழக்கு போடாதே,ஊடகப் படுகொலைக்கு நீதிவேண்டும், கருத்துச் சுதந்திரமே மக்களின் சுதந்திரம் என்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்பாட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் வரை சென்றதுடன் மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை அடைந்து முற்றுப்பெற்றது.

ஆர்பாட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்தேசிய மக்கள் முண்ணனி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும்,

வவுனியா வர்த்தக சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கங்கள், போராளிகள் நலன்புரிச் சங்கம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு ஆகிய அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும், மதகுருமார், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.