
பெங்களூரில் மலை ஏறும் போது தவறி விழுந்த இளைஞரை வட்ஸ் அப் உதவியுடன் உயிருடன் மீட்ட அதிசய சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த கவுரவ் அரோரா மற்றும் அவரது நண்பர் பிரியாங்க் ஷர்மா இருவரும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் இருக்கும் இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இருவரும் பெங்களூரில் இருந்து மதுகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மதுகிரி மலையின் உச்சியில் ஒரே கல்லில் ஆன 40 அடி உயர பாறையை அடையும் முயற்சியில் மலை ஏறியபோது, அதிக வெப்பத்தின் காரணமாகவும், களைப்பின் காரணமாகவும் பிரியாங்க் ஷர்மாவால் தொடர்ந்து ஏற முடியவில்லை.
இதை தொடர்ந்து கவுரவ் தனியாக தொடர்ந்து ஏறியபோது, கைகள் வியர்த்து ஈரமானதால் உயரமான இடத்தில் இருந்து உருண்டு விழுந்த அவர் அங்கிருந்த சிறு குட்டையில் இருந்த சகதியில் விழுந்துள்ளார்.
இந்நிலையில் மாலை 6 மணி ஆனபோதும் கௌரவ் திரும்பி வராததால் பிரியாங்க் மதுகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மதுகிரி பொலிஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு படையினரும், பிரியாங்க் ஷர்மாவும் கவுரவ் அரோராவை அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றனர். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் பிரியாங்க் ஷர்மாவின் அலைபேசிக்கு கௌரவ் வட்ஸ் அப் மூலமாக அனுப்பிய 3 புகைப்படங்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, அந்த புகைப்படங்களின் மூலமாக கவுரவ் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிந்து மீட்பு படையினர் அவரை பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
மேலும் கை, கால் என உடல் முழுவதும் காயமடைந்திருந்த அவரை மதுகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.






