நாட்டில் பதிவாகியுள்ள இரண்டாவது கொவிட் மரணம் : மீண்டும் அதிகரிக்கும் தொற்று!!

1066

கம்பஹாவில்..

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 நிமோனியா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதனை கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் உயிரிழந்ததையடுத்து, மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையின் போது கொவிட் -19 நிமோனியாவால் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் சடலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த (23) திகதி கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.