கிரிக்கெட் விளையாடிய மாணவன் மயங்கி விழுந்து மரணம்.. தண்ணீர் குடித்ததும் நேர்ந்த சோகம்!!

653

உத்தர பிரதேசத்தில்..

இளம் வயதினரிடையேயான மாரடைப்பு மரணங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 வயதைத் தாண்டாதவர்களிடையேயும், உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாடி வரும் விளையாட்டு வீரர்களிடையே மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகிறது.



17 வயதேயான மாணவன், உத்தர பிரதேச மாநிலத்தில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு, தண்ணீர் குடித்ததும், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹஸன்பூர் அருகே உள்ள காயஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் சைனி. இவர், இ-ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவரது மனைவி சவிதாதேவி. இந்த தம்பதியினரின் மகன் பிரின்ஸ் சைனி (17). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார். கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவன் குளிர்ந்த நீரை அருந்திய நிலையில் உடனே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சைனியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர்.

இதற்கிடையில் சிறுவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.