வவுனியாவில் 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்க கோரி சுகாதார சிற்றூழியர்கள் போராட்டம்!!

962

சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் நேற்று (18.01.2024) மதியம் 12.30 மணியளவில் கவனயீரப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக வைத்தியசாலை முன்றலில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியூடாக ஏ9 வீதியினை வந்தடைந்து ஏ9 வீதியூடாக பண்டாரவன்னியன் சுற்றுவட்டம் வரை சென்று மீன்றும் ஏ9 வீதியூடாக வருகை தந்து வைத்தியசாலையின் ஊழியர் நூழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரசே அனைத்து பதவி உயர்வையும் வழங்கு, பொருளாதார நீதிக்காக வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கு, வருமானம் அற்ற வரிச்சுமை எதற்கு? போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியில் கலந்து கொண்டிருந்ததுடன் சம்பளத்தினை அதிகரி, பதவி உயர்வு வழங்கு போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் 200க்கு மேற்பட்ட வைத்தியசாலை சிற்றூழியர்கள் கலந்து கொண்டிருந்தமையுடன் ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைச்சங்கம் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் நோயார்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார சிற்றூழியர்கள் தமது மதிய நேர இடைவேளையின் போதே இப் போராட்டத்தினை முன்னெடுந்தமையும் குறிப்பிடத்தக்கது.