வீதி விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவன்!!

827

புத்தளத்தில்..

புத்தளம் – மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் மதுரங்குளி – எள்ளுச்சேனை பகுதியில் நேற்றிரவு (17-01-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மதுரங்குளி – விருதோடையைச் சேர்ந்த 15 வயதுடைய கலீல் அஹ்மட் முஹம்மது எனும் பாடசாலை மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவன் விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்துள்ளார். மேலும், மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள், விருதோடை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றுடன், பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , உயிரிழந்த மாணவனின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.

மேலும், உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நல்லடக்கத்திற்காக அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் கூறினார். இந்த விபத்துச் சம்மவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.