
சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு முன் நள்ளிரவில் தம்மை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கதறி அழுததாக டெல்லியைச் சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளர் நளினி சிங் தெரிவித்துள்ளார்.
நளினி சிங் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறுகையில், ஜனவரி 17ம் திகதி நள்ளிரவு சுனந்தா தன்னுடைய கைப்பேசியிலிருந்து என்னை தொடர்பு கொண்டார். அப்போது, அவர் பதற்றமாக இருந்ததுடன் என்னிடம் கதறி அழுதார்.
நான் முதலில் அவருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும் இடையே ட்விட்டர் மூலம் நடந்த கருத்து மோதல்தான் இதற்கு காரணம் என்று நினைத்தேன்.
ஆனால் சசிதரூர் தனது பிளாக்பெர்ரி கைப்பேசியில் இருந்த குறுந்தகவல்களை அழித்துவிட்டார் என்றும், நான் ஒரு பத்திரிகையாளர் என்பதால் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டு படிக்க உதவ வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் தராருடன் சசிதரூர் துபாயில் நடத்திய சந்திப்பு குறித்தும் சுனந்தா மிகவும் கவலை கொண்டிருந்தார் என்று நளினி சிங் கூறியுள்ளார்.





